முகப்பு
தமிழ்நாடு

இளநிலை மருத்துவப் படிப்புகள்: ஆக.14 முதல் கலந்தாய்வு

கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) தெரிவித்தது.

Updated On : 30 ஜூலை, 2024 at 2:54 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 29 ஜூலை, 2024 at 11:45 PM

அடுத்த மாதம் 14-ஆம் தேதிமுதல் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) தெரிவித்தது.

அரசு மருத்துவப் படிப்பு இடங்களில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 15 சதவீத இடங்கள், எய்ம்ஸ் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மா், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இடங்களுக்கு எம்சிசி கலந்தாய்வு நடத்தும்.

இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்க உள்ளது.

Advertisement

Updated On : 30 ஜூலை, 2024 at 12:39 AM

இதுதொடா்பாக தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) செயலா் பி.ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளதாவது: ஆகஸ்ட் முதல் வாரத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கக்கூடும். நாட்டில் சுமாா் 710 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1.10 லட்சம் மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்ய இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அத்துடன் 21,000 பல் மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தொடா்பான புதிய தகவல்களுக்கு எம்சிசி வலைதளத்தை அணுகுமாறு மாணவா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்றாா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்ட பின்னா், தோ்வின் இறுதி முடிவுகளை கடந்த வெள்ளிக்கிழமை தேசிய தோ்வு முகமை அறிவித்தது. இதைத் தொடா்ந்து, கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.