முகப்பு
தமிழ்நாடு

அவிநாசியில் தரமான குடிநீர் வழங்க அரசுக்கு வலியுறுத்தி முத்திரைச் சின்னம் வெளியீடு!

கடந்த ஒராண்டுக்கும் மேலாக குடிநீர் சுவையின்றியும், குடிநீரை அருந்தும் மக்கள் காய்ச்சல், சளி,தொன்டை வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Updated On : 22 மார்ச், 2024 at 12:20 PM
பகிர்:

அவிநாசி: அவிநாசியில் பல ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்த சுவையான தரமான ஆற்றுக் குடிநீர் வழங்க வலியுறுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள் உருவாக்கியுள்ள முத்திரைச் சின்னம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் குடீநீர் பல ஆண்டுகளாக சுவை மிகுந்ததாகவும், தரமாகவும் இருந்து வந்தது.

தற்போது கடந்த ஒராண்டுக்கும் மேலாக குடிநீர் சுவையின்றியும், குடிநீரை அருந்தும் மக்கள் காய்ச்சல், சளி,தொன்டை வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Advertisement

இது குறித்து தொடர்ந்து பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியத்தினர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இருப்பினும் இது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

குறிப்பாக அவிநாசிக்கு மேட்டுப்பாளையம் முதலாவது, 2 ஆவது, 3 ஆவது திட்டக் குடிநீர் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது அன்னூர், அவிநாசி, மோப்பிரிபாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆகவே அவிநாசி மக்களின் நலன் கருதி தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் விரைவில் தரமான குடிநீர் வழங்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் அறித்திருந்தனர்.

இந்த நிலையில்,போராட்டத்தின் முதற்கட்டமாகவும், அரசுக்கு கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தும் விதமாகவும் சமூக ஆர்வலர்கள் உருவாக்கியுள்ள முத்திரைச் சின்னம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த முத்திரைச் சின்னத்தில் உயிர் வாழ தூய குடிநீர் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுப்பது போல உருக்கமான வாசகம் அடங்கியுள்ளது.

இது குறித்து நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார் கூறியது: மனிதனின் முதல் அடிப்படைத் தேவையானது குடிநீர். இதை முன்னிருத்தும் விதமாக ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவிநாசி பேரூராட்சி பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீரால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே விரைவில் தரமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.