நித்தியானந்தா இறந்துவிட்டாரா? கைலாசா விளக்கம்
நித்தியானந்தா மறைந்துவிட்டதாக வரும் தகவல் குறித்து கைலாசா விளக்கம்
தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக்கொண்டு, நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தலைமறைவாகி, கைலாசா என்ற தீவை வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் கைலாசா விளக்கம் கொடுத்துள்ளது.
நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சில தகவல்கள் வெளியாகின. பிறகு, கடந்த ஒரு சில நாள்களுக்கு முன்பு, நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து மதத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த்தியாகம் செய்துவிட்டதாக விடியோ வெளியிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எது வந்தாலும் பார்துக்கலாம் என இருந்த சுவாமிஜி இன்று தனது உயிரை தியாகம் செய்துள்ளார் என்று அவர் கூறியிருந்த நிலையில், நித்யானந்தா இறந்துவிட்டாரா அது தொடர்பாக நேற்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.
Advertisement
ஆனால், இன்று கைலாசா சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம் தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வத்தையும் எழுப்பி உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு 7 மணிக்கு, பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார் என்று அறிவிக்கப்படுள்ளது!
🔴 நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்: ஏப்ரல் 2, 2025 | 7PM ET என்று எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.