இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல்
நடிகை சரோஜா தேவி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்.
மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் இன்று(திங்கள்கிழமை) காலை காலமானார்.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இவரது மறைவுக்கு திரைத் துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா.
மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர், மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன.
கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சரோஜா தேவி ஏன் ஒரு நடிகரைத் திருமணம் செய்யவில்லை?