ஊருக்கு உழைத்தவருக்கு மரியாதை: இறுதி ஊர்வல செலவை ஏற்ற கிராம மக்கள்!
மாரடைப்பால் உயிரிழந்த வி.சி.பாண்டியனின் இறுதி ஊர்வல செலவை ஏற்ற கிராம மக்கள்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஊர் மக்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலங்களை முன்நின்று நடத்திய ஊர் பிரமுகர் பாண்டியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து, இறுதி ஊர்வல செலவுகளை ஏற்று நெகழ்ச்சியை ஏற்படுத்தினர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் வி.சி.பாண்டியன் (60). ஊர் கோயில் திருவிழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகள், இறுதி ஊர்வலத்தை முன் நின்று நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த கிராமத்தில் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகள், இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யும் பணிகளை முன் நின்று செய்து, துக்கத்திலுள்ள குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து வந்தார்.
Advertisement
Advertisement
குறிப்பாக, கரோனா பெருந்தொற்று பரவல் தருணத்தில் ஏராளமான உடல்களை அடக்கம் செய்து கிராம மக்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் பாண்டியன் உயிரிழந்தார்.
ஊர் மக்களுக்கு முன் நின்று உதவிய இவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து, இவரது இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யும் செலவுகளை ஏற்றுக் கொண்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஏறக்குறைய ரூ.75,000 நிதி திரட்டி கொடுத்து, ஊருக்கு உழைத்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி, அவரது குடும்பத்தினரின் சுமையில் பங்கு எடுத்துக் கொண்டனர்.
மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் அக்ரஹார வாழப்பாடி கிராம மக்களுக்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.