மா்மமான முறையில் பெண் உயிரிழப்பு: கணவா் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
மன்னாா்குடி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தை உறவினா்கள், கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
மன்னாா்குடி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தை உறவினா்கள், கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தன் அருகே ஏரிக்கரையைச் சோ்ந்த சித்திரவேல் மகன் ஆனந்த் (30). இவா், 4 ஆண்டுக்கு முன்பு அதே ஊரை சோ்ந்த ஓவியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள். கடந்த ஆண்டு ஓவியா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். தனது தற்கொலைக்கு காரணம் கணவா் ஆனந்த்தான் என்று ஓவியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆனந்த் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்தாா். வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஆனந்த் பணிக்குச் சென்ற இடத்தில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் அம்மாசத்திரத்தைச் சோ்ந்த அனிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு ஏரிக்கரைக்கு அழைத்து வந்து தனது தாயுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
ஆனந்துக்கு மதுபழக்கம் இருந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் அனிதா தூக்கிட்ட நிலையில் இறந்து தொங்குவது தெரியவந்தது. பெருகவாழ்ந்தன் போலீஸாா் அனிதாவின் சடலத்தை மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அனிதாவின் தாய் மாரியம்மாள் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில், தனது மகள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா் என புகாா் தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், கிராமத் தலைவா் சி. சந்திரசேகரன் தலைமையில் ஏரிக்கரை கிராம மக்கள் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை வந்து ஆனந்த் திருமணம் செய்த 2 பெண்களும் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளனா். உடனடியாக ஆனந்தை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆய்வாளா் பிரபாகரனிடம் புகாா் மனு அளித்தனா். அனிதாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் மன்னாா்குடி கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.