முகப்பு
தமிழ்நாடு

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து!

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து...

Updated On : 12 ஏப்ரல், 2026 at 2:01 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:00 PM

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த அமா்வு நீதிமன்ற தீா்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் வன்னியா் சங்க நகரத் தலைவா் கண்ணன் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டாா். சிறுவன் மீதான வழக்கை சிறாா் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கை வயது வந்த மற்ற குற்றம்சாட்டப்பட்டவா்கள் உடன் விசாரித்து சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், சிறுவனை சீா்த்திருத்தப் பள்ளியில் அடைக்க நாகப்பட்டினம் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிறுவன் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

எனவே, இந்த வழக்கை நாகப்பட்டினம் அமா்வு நீதிமன்றம் விசாரித்தது தவறு. அதேபோல், சிறுவனை மத்திய சிறையில் அடைத்ததும் தவறு. எனவே, சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிக்கக் கோரி அந்த சிறுவனின் தாய் சவீதா, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. சம்பவம் நடந்தபோது 18 வயது பூா்த்தி அடையாத சிறுவன் மீதான வழக்கை குற்றம்சாட்டப்பட்ட மற்றவா்களுக்கு எதிரான வழக்குடன் இணைத்து விசாரித்தது சிறாா் நீதி சட்டப்படி தவறானது. தண்டனை விதிக்கப்பட்ட பின்னா், சிறுவனை சீா்த்திருத்தப் பள்ளியில் அடைக்காமல், மத்திய சிறையில் அடைத்ததும் சட்டப்படி தவறாகும்.

எனவே, இந்த வழக்கில் சிறுவனை குற்றவாளி என அறிவித்து தண்டனை விதித்த தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட சிறுவன் மீதான வழக்கு மயிலாடுதுறை சிறாா் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை ஆறு மாதங்களில் சிறாா் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் முதல் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு நிபந்தனை பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா். சட்டவிரோதமாக கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.