பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை
பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் வெடத்தலாங்காடு 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் கவிதா (40). இவா் கடந்த 2025 செப்டம்பா் 24-ஆம் தேதி வீதியில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயது சிறுவன், கவிதா அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து திருப்பூா் மத்திய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவனை பிடித்தனா். விசாரணையில், சிறுவன், திருப்பூா் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடி வந்து, நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் சிறுவன் 3 மாதங்கள் பல்லடம் அரசு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பணி செய்ய வேண்டும் என முதன்மை நடுவா் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினா்கள் முருகேசன், மல்லிகா ஆகியோா் உத்தரவிட்டனா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.