இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
முறையற்ற உறவு! தனது மகனைவிட 5 வயது இளைய சிறுவனைக் கரம்பிடித்த 4 குழந்தைகளின் தாய்...
இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனைக் கரம்பிடித்த 40 வயது பெண்மணி ஒருவர், அந்தச் சிறுவன் தன்னை திருமண்ம் செய்துவிட்டு அதன்பின் ஏமாற்றிச் சென்றிருப்பதாகக் காவல் துறையிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவர், அண்மையில் உத்தரப் பிரதேச காவல் துறை அதிகாரிகளை அணுகி புகார் ஒன்றை அளித்தார். அதில், பெரும் எண்ணிக்கையிலான பயனர்களைத் தன்னகத்தே ஈர்த்து வைத்துள்ள பன்னாட்டுச் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வழியாக, தனக்கும் தனக்கு அறிமுகமில்லாத 14 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன்பின், தங்கள் இருவருக்கும் இடையிலான உறவு நெருக்கமானதாகவும், ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து மணமுடித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தன்னை தவிக்கவிட்டுவிட்டு அந்தச் சிறுவன் உறவை முறித்துச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்துள்ளார். (புகார் அளித்த பெண்ணுக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், அந்தச் சிறுவன் புகார் அளித்த பெண்ணுக்குப் பிறந்த மூத்த மகனைவிட 5 வயது இளையவனாவார்! என்பது கூடுதல் தகவல்).
இதைத்தொடர்ந்து, இவ்விவகாரம் அப்பகுதியில் பரவலாகப் பேசப்பட்டது. இதனிடையே, உள்ளூர் பெரியவர்கள் சிலரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இவ்விவகாரத்தில் எந்தவொரு வழக்கும் பதிய வேண்டாமென அவர் காவல் துறையிடம் கேட்டுக் கொண்டாராம்.
இந்த நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில், இவ்விவகாரத்தில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள அந்தச் சிறுவன் தனது அப்பாவுடன் சென்னையில் வசித்து வருவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அந்தச் சிறுவனின் சமூக வலைதளப் பயன்பாட்டை அவர்தம் பெற்றோர் கண்காணிக்கத் தவறியதும் இந்த விபரீதத்துக்கு முக்கியமாக வழிவகுத்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதன்பின், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி முறையான ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அதன்பேரில், சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கப் போவதில்லை என்ற நிபந்தைனையை ஏற்று சமரசம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், டீன்-ஏஜ் பள்ளிப்பருவ சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போதும் அதன் வழியாக அந்நிய நபர்களுடன் பழகும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை முறையாகக் கண்காணித்தல் அவசியம் என்றுரைத்தனர்.