தவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாக ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்தது குறித்து....
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாகவும், அவர் தவெகவின் கருப்பு ஆடு என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் பகுதியில் இன்று(ஏப். 12) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசியதாவது:
Advertisement
திமுக இரண்டாவது முறையாக வெற்றியடைந்த வரலாறே இல்லை, எதாவது ஒரு சக்தி அவர்களின் வெற்றியைத் தடுத்து நிறுத்தும், அப்படியொரு புதிய சக்தியாக எங்களுடைய தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் இல்லை, எம்எல்ஏவும் வெளியே வருவதும் இல்லை.
கொளத்தூர் வரும் முதல்வர், வில்லிவாக்கத்துக்கு வருவது இல்லை, ஆனால் தற்போது முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமே வில்லிவாக்கத்தில் இருக்கிறது.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் பெரம்பூர், வில்லிவாக்கத்தில் தவெகவை வெல்ல வேண்டும் என்பதற்காக பணமூட்டைகளைக் கொண்டுவந்துள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மதச்சார்ப்பற்ற கொள்கையிலும் சமூக நீதி கொள்கையிலும் உறுதியாக இருப்பதால் 233 தொகுதிகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் தவெகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டார், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் கருப்பு ஆடு. பழனிசாமி கொடுத்த பணத்துக்கு எடப்பாடி தவெக வேட்பாளர் விலை போய்விட்டார்.
எடப்பாடி தொகுதியில் பழனிசாமிக்கு கடும் போட்டியை கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பதை தலைவர் முடிவு செய்வார்.