வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்கு திமுகவினர் ரூ. 5,000 கொடுத்ததாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினர் வாக்குக்கு ரூ. 5,000 கொடுத்ததாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் தவெக வேட்பாளரும் கட்சியின் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "திமுகவினர் எப்போதெல்லாம் தோற்கின்றனரோ, அப்போதெல்லாம் ரௌடிசத்தை கையில் எடுக்கின்றனர்.
அதனை துறைமுகத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேர்தலின்போது, சுமார் 40 பேருடன் அமைச்சர் சேகர்பாபு ரௌடிசம் செய்தார். எங்கள் வேட்பாளர் அசோக் குமாரையும் உடனிருந்த வெற்றியையும் அவர்கள் தாக்கினர்.
Advertisement
சைதாப்பேட்டையிலும் எங்களின் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திமுக கடைசியாக நம்பியது, வாக்குக்கு ரூ. 5,000 கொடுப்பதைத்தான். ஆனால், அந்த ரூ. 5,000-ஐ மக்கள் தூக்கியெறிந்ததால், ஒரு ஜனநாயகத்துக்கான வெற்றியாக இந்தத் தேர்தல் இருக்கும்.
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து, வாக்குக்காக பணம் கொடுக்கும் எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடவில்லை.
தலைவர் விஜய், ஒரு மாற்றத்துக்கான ஜனநாயகத்துக்கான அரசியலை ஆரம்பித்தாரோ, அவரின் வழியிலேயே எல்லா வேட்பாளர்களும் வீடுவீடாக மக்களிடம் சென்று, இன்று ஒரு பெரிய புரட்சியை தவெகவினர் உருவாக்கி இருக்கின்றனர். கண்டிப்பாக அதன் முடிவு பின்னர் தெரிய வரும்" என்று தெரிவித்தார்.