கரூர் சம்பவம்! ஆதவ் அர்ஜுனா பேசியது ஏற்கத்தக்கதல்ல: இந்திய கம்யூ.
கரூர் சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என இந்திய கம்யூ. கூறியது பற்றி...
முதல்வர் விஜய் குறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் விமர்சனத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
அரசின் நடவடிக்கைகள், பிற அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகள் மீது விமர்சனங்களை முன் வைப்பதற்கும், சிலவற்றை கண்டிப்பதற்கும்கூட அனைவருக்கும் உரிமை உண்டு; அது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
இதனைத் தவிர்த்து, அரசியல் களத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகளைப் பேசுவதும், அதுவும் பொதுவெளியில் தரம் தாழ்ந்து பேசுவதும் சட்ட அத்துமீறலாகும். அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகிறது.
எனினும், தற்போது சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பில் உள்ளவரை காவல்துறையினர் பலவந்தமாக கைது செய்யும் அளவுக்கான தீவிர நடவடிக்கையை தவிர்த்திருக்க வேண்டும்.
அதேபோல், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதற்கு “கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்“ என்று அவரது கட்சி கூட்டத்தில் பேசியிருப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு பெருமை சேர்க்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் தளத்தில் நாகரிகத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதில், பொது வாழ்வில் உள்ள அனைவரும் அக்கறை காட்டுவது அவசியம் என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Aadhav Arjuna's remarks regarding the Karur incident are unacceptable, says CPI Leader Veerapandian
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.