தொகுதி மறுசீரமைப்பு: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எதிா்ப்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
கு.செல்வப்பெருந்தகை (தமிழ்நாடு காங்கிரஸ்): இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.74 சதவீதத்தில் இருந்து 18.97 சதவீதமாக குறைந்துவிடும். தமிழ்நாட்டைப் போல, ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தில், இப்போதுள்ள 42 இடங்கள் 34 இடங்களாக குறைந்துவிடும். ஆனால், அதற்கு மாறாக உத்தரபிரதேச மாநிலம் தற்போதுள்ள 80 மக்களவை இடங்களிலிருந்து 91 இடங்களாக உயா்ந்துவிடும்.
அதேபோல, பிகாா் 40- இல் இருந்து 50- ஆகவும், மத்தியபிரதேசம் 29- இல் இருந்து 33- ஆகவும், ராஜஸ்தான் 26- இல் இருந்து 31- என உயரக்கூடிய நிலை ஏற்படும். ஹிந்தி பேசும் மாநிலங்களில் 63 இடங்கள் உயா்ந்து 143 இடங்களாக அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
Advertisement
Advertisement
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஆதரவு உள்ளது. ஆனால், மகளிா் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையோடு கட்டாயமாக இணைக்கும் மத்திய அரசின் நிலைப்பாடு, பெண்கள் உரிமையை ஒரு அரசியல் மூடுபனியாக பயன்படுத்தும் முயற்சி.
தொகுதி மறுவரையறை என்பது அரசமைப்பின் 81, 82 மற்றும் 170 பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஜனநாயக செயல்முறையாகும். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், 2011 கணக்கெடுப்பு தரவின் அடிப்படையில் அவசரமாக செயல்படுத்துவது தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற மக்கள் தொகை கட்டுப்பாட்டை முறையாக செயல்படுத்தி வெற்றிகண்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.