பகல் 1 வரை... 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி வரை 17 சதவிகிதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி வரை 56.81 சதவிகித (3.25 கோடி) வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணிவரை 39.61 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இம்முறை 17.2 சதவிகிதம் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதேபோல், கடந்தமுறை சென்னையில் மொத்த வாக்குப் பதிவே 59.06 சதவிகிதம் என்ற நிலையில், தற்போது பகல் 1 மணிக்கே 54.58 சதவிகிதம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 76.6 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை அதிகளவிலான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதால் மொத்த வாக்கு எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
முன்னதாக நடைபெற்ற புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கடந்த முறையைவிட அதிக வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
முந்தைய தேர்தல்களில் 1 மணி நிலவரம்
2016 சட்டப்பேரவைத் தேர்தல் - 42.10% - 2.45 கோடி வாக்குகள்
2019 மக்களவைத் தேர்தல் - 39.49% - 2.36 கோடி வாக்குகள்
2021 சட்டப்பேரவைத் தேர்தல் - 39.61% - 2.48 கோடி வாக்குகள்
2024 மக்களவைத் தேர்தல் - 39.51% - 2.46 கோடி வாக்குகள்