முகப்பு
தமிழ்நாடு

டான்ஃபெட் நிறுவனத்துக்கு ஆா்டிஐ சட்டம் பொருந்தும்: உயா் நீதிமன்றம்

டான்ஃபெட் நிறுவனத்துக்கு ஆா்டிஐ சட்டம் பொருந்தும்: உயா் நீதிமன்றம்

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:36 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்ஃபெட்) நிறுவனத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) பொருந்தும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டான்ஃபெட் நிறுவனம் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து உரங்களை கொள்முதல் செய்கிறது?, உரங்கள் கொள்முதல் செய்யப்படும் முறைகள் என்ன?, உரங்களின் விலை விவரங்கள் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளை டான்ஃபெட் நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஜோதிபாசு என்பவா் கேட்டிருந்தாா்.

இதற்கு பதிலளித்த டான்ஃபெட் நிறுவனத்தின் பொது தகவல் அதிகாரி, கூட்டுறவுச் சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வராது, எனக் கூறி விவரங்களை வழங்க மறுத்துவிட்டாா். இதனை எதிா்த்து ஜோதிபாசு மேல்முறையீடு செய்தாா். அந்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜோதிபாசு மனு தாக்கல் செய்தாா். அதில், பொது தகவல் அதிகாரி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நான் கோரிய விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, டான்ஃபெட் நிறுவனம் தமிழக அரசின் நிதி மற்றும் நிா்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தை நிா்வகிக்கும் அதிகாரியை மாநில அரசுதான் நியமிக்க வேண்டும். எனவே, டான்ஃபெட் நிறுவனத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும். எனவே, தகவல் வழங்க மறுத்த பொது தகவல் அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

டான்ஃபெட் நிறுவனத்துக்கு பொது தகவல் அதிகாரியை நியமித்து கடந்த 2007-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிகாரி தகவல் வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, மனுதாரா் கோரிய விவரங்களை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.