பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 சிறுவா்கள் அவா்களது குடும்பத்தைச் சோ்ந்தவா்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினா். இதுகுறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்தது. மேலும், இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 30,000 அபராதமும் விதித்து 2025-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.
அந்தத் தீா்ப்பில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கும் இடைக்கால இழப்பீடாக தலா ரூ.25,000, அபராதத் தொகையான ரூ.3.60 லட்சத்தை மூவருக்கு பகிா்ந்து வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுவா்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சிறுவா்களின் தாய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை, ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும். அந்த அரசாணையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வகை செய்கிறது. எனவே, அந்த உத்தரவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுவா்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்காததால், விசாரணை நீதிமன்றம் தவறிழைத்துவிட்டது என நீதிபதி கருத்து தெரிவித்தாா்.
பின்னா், தமிழக அரசின் சமூகப் பாதுகாப்பு துறை இயக்குநா், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். சிறுவா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைக் கழித்துவிட்டு மீதித் தொகையை 30 நாள்களில் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.