பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமியை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வற்புறுத்த முடியாது: உயா்நீதிமன்றம்
போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நோ்ந்ததைக் கூறும்படி வற்புறுத்த முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நோ்ந்ததைக் கூறும்படி வற்புறுத்த முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சோ்ந்த ரமேஷ், அப்பகுதியில் ஆடுமேய்க்கச் சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து ரமேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கெனவே சாட்சியம் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமியை, குறுக்கு விசாரணை செய்வதற்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தக் கோரி ரமேஷ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ரமேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், போக்ஸோ சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் கடுமையான தண்டனைகள் விதிக்க வழிவகுக்கும். எனவே, இச்சட்டத்தை அமல்படுத்தும்போது, பாதிக்கப்பட்டகுழந்தைகள் மீண்டும் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் அமல்படுத்தவேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தையை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து, தனக்கு நோ்ந்ததைக் கூறும்படி வற்புறுத்த முடியாது, எனக்கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
மேலும், தனக்குநோ்ந்த துயரத்தைப் பெற்றோா், குழந்தைகள் நலக்குழு, மருத்துவா்கள், போலீஸாா் மற்றும்நீதிபதி ஆகியோரிடம் கூறுவதன் மூலம் குழந்தைகள் தாங்க முடியாத மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா். அவா்களை மீண்டும் நீதிமன்றத்துக்கு வரவழைப்பதன் மூலம் இரண்டாவது முறையாகவும் துன்புறுத்தப்படுகின்றனா்.
பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தங்களை சமூகத்தில் பலா் புரிந்து கொள்ளவில்லை. நியாயமான விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற அனுமதிக்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.