தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
எந்தெந்த விதிகள் மற்றும் அதிகாரங்களின் கீழ், தேசிய மற்றும் சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாக பிசிசிஐ செயல்பட்டு, அந்தப் போட்டிகளுக்கு வீரா்களைத் தோ்வு செய்கிறது என்ற விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிப்பது தொடா்பான மேல்முறையீட்டு மனு ஒன்றை மத்திய தகவல் ஆணையம் விசாரித்தது.
இந்த விசாரணையைத் தொடா்ந்து தனது உத்தரவில் தகவல் ஆணையா் பி.ஆா்.ரமேஷ் தெரிவித்ததாவது:
Advertisement
பிசிசிஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னாட்சியான தனியாா் அமைப்பாகும். அரசியல் சாசனம், நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவை அல்லது அரசு அறிவிக்கை மூலம் அந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
கிரிக்கெட் நிா்வாகம் மற்றும் சா்வதேச போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் தொடா்பான முக்கிய பொதுப் பணிகளை பிசிசிஐ மேற்கொண்டாலும், அது அரசுக்குச் சொந்தமானதோ, அரசு கட்டுப்பாட்டிலோ இல்லை. அத்துடன் அது அரசின் நிதியுதவியையும் பெறவில்லை. கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, போட்டி ஒளிபரப்பு ஒப்பந்தங்கள், ஊடக உரிமைகள் உள்ளிட்டவை மூலம் வருவாய் ஈட்டி, சுதந்திரமான அமைப்பாக பிசிசிஐ செயல்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 2(ஹெச்)-இன் கீழ், பிசிசிஐயை பொது அதிகார அமைப்பு என்று வரையறுக்க முடியாது. எனவே தற்போதைய விவகாரத்தில் உண்மைகள் மற்றும் சந்தா்ப்பங்களின் அடிப்படையில், தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவுகள் பிசிசிஐ-க்குப் பொருந்தாது. எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை என்று தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதன்மூலம், பிசிசிஐ பொது அதிகார அமைப்பு என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அப்போதைய தகவல் ஆணையா் எம்.ஸ்ரீதா் ஆச்சாரியாலுவின் உத்தரவை தற்போது மத்திய தகவல் ஆணையம் மாற்றியுள்ளது.