தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், விமான டிக்கெட்டுகள் விலை உயர்வு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், விமான டிக்கெட்டுகளின் விலை உயர்ந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக,வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு வந்தோர் மீண்டும் பணியிடம் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், பணியிடம் திரும்ப விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர். ஏனெனில், சாதாரண விலையைவிட விமான டிக்கெட்டுகள் அதிக விலையைக் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
திருச்சியிலிருந்து தில்லி செல்வதற்கு சாதாரண நாள்களில் சுமார் ரூ. 9,000 வசூலிக்கப்படும் நிலையில், தேர்தல் காரணமாக ரூ. 15,000 வரையில் அதிகரித்துள்ளது.
Advertisement
அதேபோல், திருச்சியிலிருந்து மும்பைக்கு சாதாரண நாள்களில் சுமார் ரூ. 6,000 என்ற நிலையிலிருந்து, தேர்தல் காரணமாக ரூ. 13,000 வரையில் உயர்ந்துள்ளது. திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரூ. 7,000-ஆகவும், ஹைதராபாதுக்கு ரூ. 8,000-ஆகவும், சென்னைக்கு ரூ. 7,000-ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து தில்லிக்கு ரூ. 11,500-ஆகவும் (சாதாரண நாள்களில் ரூ. 7,500), மும்பைக்கு ரூ. 7,5000ஆகவும் (சாதாரண நாள்களில் ரூ. 6,000) உயந்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.