மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ’ஜன நாயகன்’ பார்த்தவர் கைது!
சென்னை மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ’ஜன நாயகன்’ பார்த்தவர் கைது...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஜன நாயகன் படம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் வெளியாவதில் தாமதம் நீடித்து வருகின்றது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி சட்டவிரோதமாக ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்.
Advertisement
மேலும், ஜன நாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சிசிடிவி கண்காணிப்பு அறையில் அமர்ந்து ஜன நாயகன் படம் பார்த்த யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிடிவி அறையில் அமர்ந்து ஜன நாயகன் படம் பார்ப்பதை புகைப்படம் எடுத்து, ‘ஓட்டு பெட்டி வர இடத்துல கூட நம்ம தளபதி என்ட்ரி தான்’ என முகநூலில் அவர் பதிவிட்டிருந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.