மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: அறுசுவையுடன் பக்தர்களுக்கு விருந்து!
மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1 லட்சம் பேருக்கு விருந்து.
மதுரை மீனாட்சியம்மன் - - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) காலை நடைபெற்றது.
வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் வெற்றிலைப் பாக்கு வைத்து, விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 1 லட்சம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சார்பில், மதுரையில் கடந்த 27 ஆண்டுகளாக ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
கோதுமை இனிப்பு, கல்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பார் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் இந்த விருந்தில் அடங்கும். விருந்துக்குத் தேவையான காய்கறிகளை மாட்டுத்தாவணி சந்தை வியாபாரிகளும், அரிசியை பழமுதிர்ச்சோலை திருவருள் பக்த சபை அறக்கட்டளையைச் சோ்ந்த உறுப்பினர்கள், மீனாட்சி அம்மன் பக்தர்களும் வழங்கியுள்ளனர்.
திருக்கல்யாணத்தையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுற்றுப் பகுதிகள், மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானம், உணவு வகைகள் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.