முகப்பு
தமிழ்நாடு

அதிகாரம் யாருக்கு? தேர்தல் கருத்துக் கணிப்பு மீது இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு மீது இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன் என்பது குறித்து..

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:04 PM
அதிகாரம் யாருக்கு? - ANI
பகிர்:

தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகவிருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்று அரை மணி நேரத்துக்குப் பிறகே தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருப்பதால் (ஏப். 29) இன்று மாலை 6.30 மணிக்கு வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன.

வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்புகளை கேட்டு முக்கிய செய்தி மற்றும் தன்னார்வலர் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று எந்த விதமான முடிவுகள் வெளியாகும் என்பதை முன்கூட்டியே அறிவதற்கான ஆவலும் இன்றைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் இணைந்துள்ளது.

Advertisement

முதல் கட்ட வாக்குப்பதிவு அஸ்ஸாம், கேரளம், புதுவையில் ஏப். 9ல் நடந்து முடிந்தது. ஏப். 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தலும் முடிந்து, 29ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்று முடிந்ததும் கருத்துக் கணிப்புகள் வெளியாகும்.

ஆனால், தேர்தல் முடிவுகள் அப்படியே இருக்கும் என்பது உறுதியில்லை. இதுவரை அப்படியே நடந்ததும் இல்லை என்பதுதான் வரலாறு. ஆனாலும் இந்த 2026 வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணமே தவெகவின் அறிமுகம்தான்.

முதல்முறையாக நடிகர் விஜய்யின் தவெக இந்த ஆண்டு தேர்தலில் களமிறங்கியிருக்கிறது. குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தினர் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், பாரம்பரியமாக திமுக அல்லது அதிமுகவுக்கு வாக்களித்தவர்களில் எத்தனை பேரின் வாக்குகளை தவெக பிரிக்கிறது என்பதில்தான், யார் வெற்றியாளர் என்பது தீர்மானிக்கப்படும்.

திமுக மீது அதிருப்தி ஏற்பட்டவர்கள், திமுக ஆளும் எம்எல்ஏ மீது அதிருப்தி உள்ளவர்கள் அதிமுகவுக்கு பதிலாக தவெகவுக்கு வாக்களிக்கலாம். அதுபோலவே, பாஜகவுக்கு எதிரானவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க முடியாமல் அதே வேளையில் திமுக பக்கமும் சாய முடியாமல் தவெகவுக்கு வாக்களிக்கலாம். இப்படியானால் வாக்கு சதவீதங்கள், வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் போன்ற அனைத்திலுமே புதிய ஒரு கணக்கு உருவாகவிருக்கிறது.

அது என்ன, யார் வாக்குகளை பிரிக்கப் போகிறது தவெக, அது யாருக்கு சாதகமாக மாறவிருக்கிறது. அதிகாரம் யாருக்கு என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது. அந்த ஆர்வமே இன்றைய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்புக்குக் காரணமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.