தவெக அணியில் உள்ள நண்பர்கள் தேர்தல் வரும்போது எங்களுடன் வந்து சேருவார்கள்: முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி
தவெக அணியில் உள்ள நண்பர்கள் தேர்தல் வரும்போது எங்களுடன் வந்து சேருவார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி பேசியது தொடர்பாக...
புதுக்கோட்டை: தவெக அணியில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் தேர்தல் வரும்போது எங்களுடன் வந்து சேருவார்கள் என்று திமுக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
108-ஐ 120-ஆக உயர்த்த திட்டம்
Advertisement
Advertisement
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களின் பதவியை ராஜிநாமா செய்த அடுத்த நிமிடம், தவெகவில் உறுப்பினர்களாக சேருகிறார்கள். குதிரை பேரம் நடப்பது நன்றாகத் தெரிகிறது. 108 என்ற எண்ணிக்கையை 120 ஆக உயர்த்தப் பாடுபடுகிறார்கள்.
இதுபற்றியெல்லாம் புகார் அளித்தால் ஊழல் தடுப்புப் பிரிவோ, காவல்துறையோ வழக்குப் பதிவதில்லை.
ஆனால், இளையராஜா என்ற எம்எல்ஏவை, யாரோ ஒருவர் தொடர்பு கொண்டு பேசினாராம், அப்போது பணம் குறித்து எந்தப் பேச்சோ, பரிமாற்றமோ நடந்ததாகத் தெரியவில்லை. அவருடன் தொடர்பில் இருந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்கிறார்கள். பணப் பரிமாற்றம் நடக்காத ஒன்றில் வழக்குப் பதிவு செய்ததே தவறு.
செந்தில் பாலாஜியைக் கைது செய்ய திட்டம்
முதல்வர் விஜய், கரூருக்குச் செல்வதற்கு முன்பு செந்தில்பாலாஜியைக் கைது செய்துவிட வேண்டும் என முயற்சிப்பது போலத் தெரிகிறது.
ஊழல் செய்தவர்கள் எல்லோரையும் சுத்தப்படுத்தும் வாஷிங்மெஷின் தவெகவிடம் இருக்கிறது. அவர்களையெல்லாம் புனிதர்களாகவும், புத்தர்களாக மாற்றி, கோயில்கூட கட்டுவார்கள் போலத் தெரிகிறது.
குதிரை பேரத்தை ஸ்டாலின் ஏற்பதில்லை
குதிரை பேரத்தில் திமுக ஈடுபடுவதில்லை. அதனை எங்கள் தலைவர் ஸ்டாலின் ஏற்பதுமில்லை. அப்படிச் செய்வதானால் எங்கள் கூட்டணிக் கட்சிகளை அனுப்பிவிட்டிருக்க மாட்டோம். எங்களிடமே அரவணைத்து வைத்திருந்திருக்க முடியும்.
அதிமுகவுக்கு திமுக ஆதரவளிப்பதாக ஒரு புள்ளி அளவுக்குக் கூட நாங்கள் நினைத்ததே இல்லை. தவறாகச் சொல்கிறார்கள்.
கொள்ளைப்புற ஆட்சி பழக்கமில்லை
திமுக 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளில் பாதியைக் கூட எவராலும் செய்ய முடியாது. அவ்வாறு செய்துவிட்டு தேர்தலுக்கு வரட்டும் சந்திக்கலாம்.
தேர்தலில் நின்று ஆட்சிக்கு வருவதைத்தான் திமுக என்றைக்கும் நம்புகிறது. கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வருவது எங்களுக்குப் பழக்கமில்லை.
கூச்சல்தான் போடுவார் வைகோ
மதிமுக அவர்களது எம்எல்ஏக்கள் இரண்டுபேரைக் கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத கட்சி அது. எப்போதும் கூச்சல்தான் போடுவார் வைகோ. திமுக ஆட்சியில் ஊழல் அதிகமாக நடந்தது எனச் சொல்கிறார் என்றால், எங்கள் பெயரைச் சொல்லி அவர் வாங்கியிருக்கக் கூடும்.
நடிக்க வைத்திருக்கிறார் விஜய்
சட்டப்பேரவை நிகழ்ச்சியே திரைப்படப் படப்பிடிப்பு போலத்தான் நடக்கிறது. எல்லோரையும் நடிக்க வைத்திருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.
எங்கள் நண்பர்கள் தேர்தல் வரும்போது எங்களுடன் வந்து சேருவார்கள்
குளத்தில் தண்ணீர் வற்றும்போது அடுத்த குளத்துக்கு பறவைகள் போவது இயல்புதான். இப்போது தவெகவுடன் இருப்பவர்களில் எங்கள் நண்பர்களும் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது அவர்கள் எங்களுடன் வந்து சேருவார்கள் என்றார் ரகுபதி.
Friends in the TVK camp will join us when the elections arrive says Former Minister S. Raghupathy...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.