தவெகவில் சி. விஜயபாஸ்கர் இணைவது தள்ளிப்போகிறதா? காரணம் என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைவது தள்ளிப்போக வாய்ப்பு...
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைவது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது.
எஸ்.பி. வேலுமணி அணியில் சி. விஜயபாஸ்கரும் இருந்தார். இதன்பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன. எனினும் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இபிஎஸ்ஸை சந்திப்பதை தவிர்த்து வந்தனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதிமுக தலைமையான இபிஎஸ் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டார்.
இந்நிலையில் விஜயபாஸ்கர் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்தை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (ஜூன் 24) சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளார்.
அதன்படி, ஜூன் 29 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல்வர் விஜய் முன்னிலையில் விஜயபாஸ்கர் தவெகவில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஜூன் 29, 30ல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடப்பதால் அதில் முதல்வர் விஜய் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் இந்த நிகழ்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயபாஸ்கர், ஜூலை 2 ஆம் தேதி தவெகவில் இணையவுள்ளதாகவும் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், ஊழல் வழக்கு உள்ள விஜயபாஸ்கரை ஏன் தவெகவில் இணைக்க வேண்டும்? என தவெகவில் சில மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
Is C. Vijayabaskar entry into TVK being delayed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.