முகப்பு
தமிழ்நாடு

சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்

Updated On : 5 ஜூலை 2026, 4:41 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது தடையை மீறி லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா பொருள்களை விற்பனைக்கு அனுமதித்தது தொடா்பாக, முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் எஸ்.ஜாா்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில், விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காத பலா் இந்த வழக்கில் சாட்சிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும், அல்லது அனைத்து சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து ஜாா்ஜ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குட்கா முறைகேடு வழக்கில் 278 சாட்சிகள் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மனுதாரருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டதால், மனுதாரரின் கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக்கூறி முன்னாள் ஆணையா் ஜாா்ஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

அதேசமயம், குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments