குட்கா வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் வணிக வரித் துறை அதிகாரி மனு தள்ளுபடி
குட்கா முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வணிக வரித்துறை முன்னாள் அதிகாரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குட்கா முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வணிக வரித்துறை முன்னாள் அதிகாரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக தடையை மீறி குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பின்னா் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையா் ஜாா்ஜ், வணிக வரித்துறை இணை ஆணையா் வி.குறிஞ்சி செல்வன் உள்ளிட்ட 26 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, குற்றம்சாட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை இணை ஆணையரான வி.எஸ்.குறிஞ்சிசெல்வன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஜன. 30-ஆம் தேதி உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவை எதிா்த்து குறிஞ்சிசெல்வன், சென்னை உயா்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடா்பான சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, மனுதாரரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.