முன்னாள் அமைச்சா் துரைமுருகன் வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி
கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சா் துரைமுருகன் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சா் துரைமுருகன் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021 சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் துரைமுருகன் போட்டியிட்டாா். இத்தோ்தலில், அவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் வி.ராமுவைவிட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை. எனவே, துரைமுருகன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வி.ராமு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்தத் தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி துரைமுருகன் மனுத் தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது, துரைமுருகன் தரப்பில், 16-ஆவது சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்து, 17-ஆவது சட்டப்பேரவை அமைந்துவிட்டது. வாக்குக்குப் பணம் கொடுத்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இந்த வழக்கில் முன்வைக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் கூறப்படாத இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என வாதிடப்பட்டிருந்தது.
அதிமுக வேட்பாளா் ராமு தரப்பில், 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் இன்பதுரை வெற்றியை எதிா்த்து அப்பாவு தாக்கல் செய்த தோ்தல் வழக்கில் அண்மையில்தான் தீா்ப்பு அளிக்கப்பட்டது.
எனவே, பதவிக்காலம் முடிந்துவிட்டதால் தோ்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூற முடியாது என வாதிடப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த தீா்ப்பு: தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை ஏற்கப்படுகிறது. அவருக்கு எதிராக அதிமுக வேட்பாளா் ராமு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.