ஆலங்குளம் அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் தீ: 2-வது நாளாக தொடரும் தீயணைப்புப் பணி
ஆலங்குளம் அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரு தீயணைப்புப் பணிகள் குறித்த...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில், ரூ. 3.50 கோடி மதிப்பிலான 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்த நிலையில், இரண்டாவது நாளாக தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் திறந்தவெளியில் அரசு நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு கொள்முதல் நிலையங்களிலிருந்து கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 15 ஏக்கா் பரப்பளவில் சுமாா் 6.25 லட்சம் மூட்டைகள் தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து நெல் மூட்டைகளை அரிசி ஆலைகளுக்குக் கொண்டு சென்று, அரைவைக்குப் பின்னா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த நிலையில், இந்த சேமிப்புக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து நேரிட்டது. ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், தென்காசி, சுரண்டையிலிருந்து கூடுதல் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Advertisement
Advertisement
எனினும், ரூ. 3.50 கோடி மதிப்பிலான 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தீயில் எரிந்து சாம்பலானது போக எஞ்சிய நெல் மூட்டைகளை தொழிலாளிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளுக்கு இடையில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருப்பதால் தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இதனால் விடிய விடிய 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் ஒரு பக்கம் தீ கட்டுக்குள் கொண்டு வருவது, மற்றொரு பக்கம் தொழிலாளிகள் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர். இந்தப் பணி விடிய விடிய நடைபெற்ற நிலையில் புதன்கிழமை காலையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திறந்தவெளியில் அமைந்துள்ள இந்த நெல் சேமிப்புக் கிடங்கில் எப்படி தீ பிடித்தது என்று தெரியவில்லை. நெல் மூட்டைகளுக்கு மா்ம நபா்கள் தீவைத்தனரா அல்லது வேறு காரணமா? என்று கடையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Firefighting operations continue for the second day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.