கரூர் பலி: அரசுப் பணிக்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
அரசுப் பணிக்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதற்கு எதிரான முறையீட்டை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-இல் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 142 போ் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றது.
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பான விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ, நிலுவையில் உள்ள விசாரணை குறித்தோ முதல்வர் ஜோசப் விஜய் உள்பட எவரும் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வா் சந்திப்பதற்கு அனுமதிக்க கூடாது எனக்கோரி, திமுக தாக்கல் செய்த மனுவை செவ்வாய்கிழமை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில் கரூரில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் பங்கேற்கிறார்.
அப்போது, தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான தீரன் திருமுருகன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு முன்பாக இன்று(ஜூலை 8) விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், “இந்த சம்பவம் தொடர்பான வழக்கு முன்னதாகவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்திலேயே முன்வைக்கலமே?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், “இதனை மனுவாக தாக்கல் செய்யுங்கள். பட்டியலிடப்பட்டு, வழக்கமான நடைமுறையின்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று நீதிபதிகள் கூறியதோடு, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.
The Madurai Bench of the Madras High Court has refused to hear, as an urgent matter, a plea opposing the provision of government jobs to the families of those who died in the stampede in Karur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.