திருப்பனந்தாள் அருகே வங்கியில் தீ: ஆவணங்கள் எரிந்து நாசம்
இந்தியன் வங்கி கிளையில் இரவு நேரத்தில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது தொடர்பாக...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே தத்துவாஞ்சேரியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் புதன்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்தவர்களும், லாக்கரில் நகை வைத்தவர்களும் வங்கி முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே தத்துவாஞ்சேரியில் உள்ள இந்தியன் வங்கியில் புதன்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது.
இதில் வங்கியில் இருந்த ஆவணங்கள் எரிந்ததால் கடும் புகை மூட்டம் எழுந்தது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவல் காட்டுத் தீயாய் பரவியதும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், வங்கியில் நகைகளை அடமானம் வைத்தவர்களும், லாக்கரில் நகை வைத்தவர்களும், பணத்தை டெபாசிட் செய்திருப்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வங்கி முன் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
நல்வாய்ப்பாக நகைகள் பணமும் தப்பியது
இதற்கிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நல்வாய்ப்பாக வங்கியில் பல கோடி மதிப்பிலான அடமானம் வைக்கப்பட்ட நகைகள், லாக்கரில் வைக்கப்பட்ட நகைகள், அதேபோன்று வங்கியில் இருந்து பல கோடி பணமும் தப்பியது.
நகையும் பணமும் பத்திரமாக உள்ளது
தகவல் அறிந்து கும்பகோணத்தில் இருந்து வந்த இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் மக்களிடம் நகைகளும் பணமும் பத்திரமாக உள்ளது என உறுதி அளித்ததுடன் உங்களது நகைகளை நாளை சரிபார்த்துக் கொள்ளலாம் என உத்தரவாதம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து வங்கி முன் திரண்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
மின் கசிவாக காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே வங்கியில் பணிபுரிந்த கிளை மேலாளர் சுமார் ரூ.2 கோடி அளவிற்கு வாடிக்கையாளர் பெயர்களில் கடன் பெற்று மோசடி செய்ததாகவும், அதுபோன்று தற்போது நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வங்கி முன் மக்கள் திரண்டனர்.
இந்த சம்பவத்தால் தத்துவாஞ்சேரி பகுதியில் 3 மணி நேரம் பதட்டமான சூழல் நிலவியது.
Fire at bank near Thiruppanandal: Documents destroyed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.