சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி! நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்...
பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையில் உள்ள காவலருக்கே பாதுகாப்பில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி!
Advertisement
Advertisement
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப் படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சிதான் தூய சக்தியா? வெட்கக்கேடு!
"நான் உங்கள் அண்ணன்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய், முதலில் இப்புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றியவரும், தற்போது 'சிங்கப்பெண்' சிறப்புப் பணிக்குழுவில் இருப்பவருமான பெண் தலைமைக் காவலருக்கு அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.