பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே நல்ல தலைமைக்கு அழகு: நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி...
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திர அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவை சூலூரில் மே 21 அன்று காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறாய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன் என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களே.
Advertisement
Advertisement
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே? தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே?
குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை.
எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.