தனிப் பாதுகாவலர் ஏன்? காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்.பி.
முதல்வரின் தனிப்பட்ட பாதுகாவலர் குறித்து அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி...
பல அடுக்கு பாதுகாப்பு இருந்தும் தனிப்பட்ட பாதுகாவலருடன் முதல்வர் விஜய் வலம் வருவது ஏன்? என்றும் தமிழக காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா? என்றும் அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக தலைவர் விஜய், முதல்வராவதற்கு முன்பிருந்தே அவரின் பாதுகாவலராக நயீம் மூசா இருந்து வருகிறார். கேரளத்தைச் சேர்ந்தவரான இவர் துபையில் பிரபலங்களுக்கான பாதுகாப்பு வழங்கல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அப்போதே, இவருக்கும் விஜய்க்கும் பழக்கம் ஏற்பட, தேர்தலையொட்டி விஜய்யின் முதன்மை பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். தற்போது முதல்வரான பின்னும் விஜய்யுடன் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார், சமீபத்தில் முதல்வரின் தில்லி பயணத்திலும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் அதிமுக எம்.பி. இன்பதுரை, முதல்வர் விஜய்யின் பாதுகாவலர் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய், தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?
மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?
அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், 'பாதுகாவலர்' என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா?
அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?
பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்குத் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.