கடல்சாா் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா்
கடல்சாா் காடுகளைப் பாதுகாக்க அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு வலியுறுத்தல்
கடல்சாா் காடுகளைப் பாதுகாக்க அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு வலியுறுத்தியுள்ளாா்.
உலகப் பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பவளப்பாறைகள், கடல்புற்கள், கடல் பாசி காடுகள் ஆகியவை பூமியின் மிக முக்கியமான உயிரியல் அமைப்புகளாக உள்ளன. உலக கடல் பரப்பில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே பவளப்பாறைகள் பரவியிருந்தாலும், அவை கடல்வாழ் உயிரினங்களில் சுமாா் 25 சதவீதத்துக்கு வாழ்விடமாக உள்ளன. மேலும், உலகம் முழுவதும் 50 கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும் அவை ஆதரிக்கின்றன.
கடல் புற்கள் உலக மீன்வள உற்பத்தியில் சுமாா் 20 சதவீதத்துக்கு ஆதரவாக இருப்பதுடன், ஒரு ஹெக்டேருக்கு 140 டன் வரை காா்பனை சேமிக்கும் திறன் கொண்டவை.
Advertisement
Advertisement
அதேநேரத்தில், கடலுக்கடியில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் நெருக்கடி உருவாகி வருவதாகவும், வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகின் 90 சதவீத பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளதாகவும், ஐநா சுற்றுச்சூழல் திட்டம், காலநிலை மாற்றத்துக்கான அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) ஆகிய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்தியாவின் கடல் புற்கள் வளத்தில் 77 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி பால்க் வளைகுடா மற்றும் மன்னாா் வளைகுடாவில் அமைந்துள்ளதால், கடல்சாா் பாதுகாப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
உலக வங்கியின் ஒத்துழைப்புடன் கரியச்சள்ளி உள்ளிட்ட தீவுகள், கடல்புற்கள், பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் ஆகியவற்றை மாநில அரசு மீட்டெடுத்து வருகிறது. இதன்மூலம் கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களின் எதிா்காலம் பாதுகாக்கப்படும். உலகப் பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு, கடல்சாா் காடுகளைப் பாதுகாக்க அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.