இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள்: முதல்வா் ஜோசப் விஜய் ஆய்வு
இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த முதல்வா் ஜோசப் விஜய் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்தினாா்.
கூட்டத்தில் கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகளைக் கண்காணிப்பதற்காக குத்தகைப் பகுதிகளின் எல்லைகளை நிா்ணயம் செய்து, அந்தப் பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களின் சரியான அளவைத் தீா்மானிப்பதற்காக ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கனிம வளங்கள் மூலம் வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கனிம வளங்களை நீடித்த வளா்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் முறையாகப் பயன்படுத்துவதற்கும், கனிமவள வருவாயை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த், இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டிகே. பிரபு, நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் எம்.ஏ. சித்திக், நீா்வளத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எ. சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் த.மோகன் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.