பள்ளிகளில் விஜய் பாடல்களைப் பாடிய மாணவர்கள்! நெட்டிசன்கள் வருத்தம்!
பள்ளிகளில் விஜய் பாடல்களைப் பாடிய மாணவர்கள் குறித்து நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த பீஸ்ட் திரைப்படப் பாடல்களை அரசுப் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்துப் பாடிய பாடல் விடியோவைப் பார்க்கும் மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசுப் பள்ளியில் தவெகவினர் நுழைந்து, பாடமெடுத்த விடியோ வைரலாகி மக்களை துயரத்துக்குள்ளாக்கிய நிலையில், பள்ளிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்பட பாடல்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒன்றாக பாடிய விடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு காலம் வரை வீட்டில் சினிமாப் பாடல்களைப் பாடவே பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்த்தார்கள். சினிமாவில் வரும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்கள் மாணவர்களை பாதிக்கக் கூடாது என்று பெற்றோர் நினைத்தனர்.
Advertisement
Advertisement
ஆனால், இன்று பள்ளிக்குள் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து நின்று சினிமா பாடலைப் பாடும் விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிகழ்வு நிச்சயம் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்திருக்கலாம். இதனை விடியோ எடுத்து வெளியிட்டிருப்பது யார், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? இதனை பள்ளிக் கல்வித் துறை நிச்சயம் கண்டித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்கு கெடாமல் இருக்க தவெக அரசு நிச்சயம் ஏதேனும் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்து வருகின்றன.
பள்ளிகளில் வளரும் பிள்ளைகள் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம். இந்த நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அங்கு பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
அது மட்டுமல்ல, பொதுவாக பிள்ளைகளின் புகைப்படங்கள் விடியோகள் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் பரவுவதும், அவர்கள் படிக்கும் பள்ளியின் பெயரோடு அவர்களது புகைப்படங்கள் வெளியாவதும், தவறான முறையில் இது விளம்பரப்படுத்தப்படுவதும் மாணவ, மாணவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும்.
ஒவ்வொரு பெற்றோருமே, தங்கள் பிள்ளைைகள் இந்தப் பள்ளியில் படித்து அவர்கள் விஜய் பாடலைப் பாடிய விடியோவைப் பார்த்தால் என்ன விதமான மன சங்கடத்தை அடைவார்கள் என்பதையே நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
தவெக அரசின் முதல் இலக்கு பள்ளிகளாகத்தான் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள், கழிப்பறை, குடிநீர் வசதி போன்றவற்றை செய்துகொடுத்து தனியார் பள்ளிகளுக்கு இணையாகக் கொண்டு வருவதில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, தவெக கட்சியின் விளம்பர தூதர்களாக பள்ளிகளை மாற்றும் முயற்சியை தொடரக் கூடாது என்பதே தமிழ்நாட்டில் தவெக ஆட்சிதான் வேண்டும் என வாக்களிக்க பல கோடி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Students sang Vijay's songs in schools! Netizens express disappointment!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.