விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளியை அடையாளம் காட்டிய நகக்கீறல்!
விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டது பற்றி...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி கைதாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 12-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளியைக் கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. சந்தேகத்திற்குரிய மற்றும் குற்றப்பின்னணி கொண்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் சிலரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி பிடிபட்டது எப்படி?
இந்த வழக்கில் குற்றவாளியை அடையாளம் காண்பதில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.
சந்தேகத்தின் பேரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களில் மூனிஸ்வரனின் கையில் நகக் கீறல்கள் இருந்துள்ளது.
இதனிடையே, உயிரிழந்த மாணவியின் நகங்களுக்குள் சதைத் துணுக்குகள் சிக்கியிருந்தன. அந்த சதையுடன் டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் முனீஸ்வரனின் மாதிரிகள் ஒத்துப்போனது.
இதனைத் தொடர்ந்து, முனீஸ்வரனை முறையாக கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முனீஸ்வரனின் குற்றப் பின்னணி
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முனீஸ்வரனின் மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.