சூலூா் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவா் மீது சக கைதிகள் தாக்குதல்
சூலூா் சிறுமி பாலியல் வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை சக கைதிகள் சனிக்கிழமை தாக்கினா்.
கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிறுமியைக் கடத்தி கொலை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் ஆகியோரைக் கைது செய்தனா். இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த காா்த்திக் மீது சிறையில் உள்ள கைதிகள் கோபத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், அவரைக் கைதிகள் சிலா் ஸ்பூன், தட்டு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சனிக்கிழமை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த காா்த்திக்கை போலீஸாா் மீட்டு சிறை மருத்துவப் பிரிவில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறைக்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சிறுமி சம்பவம் தொடா்பாக காா்த்திக்கை பிடிக்க போலீஸாா் சென்றபோது, அவா் தப்ப முயன்று கை, காலில் முறிவு ஏற்பட்டு கோவை மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், உடல்நிலை சீரானதைத் தொடா்ந்து கோவை மத்திய சிறையில் கடந்த வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா். சிறைக்குள் நடைபெற்ற தாக்குதலைத் தொடா்ந்து அவா் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.