புதுச்சேரியில் தவெக கூட்டணி: 2 தொகுதிகள் ஒதுக்கீடு! யாருடன்?
புதுச்சேரியில் தவெக கூட்டணி அமைத்துள்ளது தொடர்பாக...
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல்முறையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையை ஏற்றுக்கொண்டு நேயம் மக்கள் கழகம் என்ற கட்சி தவெகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 பேரவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மாா்ச் 23) நிறைவடைகிறது.
இந்த நிலையில், பேரவைத் தோ்தலில் முதல்முறையாக களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டு இருந்தது.
அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சித் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரியில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதுச்சேரி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் ஜி. நேரு (எ) குப்புசாமி எம்.எல்.ஏ, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.