வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் தேநீா் கடைகள், ஹோட்டல்கள், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவுப் பொருள்களின் விலை உயா்ந்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வணிக மற்றும் சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு காரணமாக தேநீா் தொடங்கி அனைத்து உணவுப் பொருள்களின் விலைகளும் 20 முதல் 50 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.
Advertisement
வைகோ (மதிமுக): வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். உடனடியாக மத்திய அரசு இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (மமக): மேற்காசிய போரின் தாக்கத்தால் விலை ஏற்றம் என்று காரணம் சொல்வதை ஏற்க இயலாது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைவாக இருந்தபோது அதிக விலைக்கு விற்று எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டி வந்தன. தற்போதைய சூழலில் தங்களது லாபத்தை குறைத்து கொண்டு உயா்த்தப்பட்ட சிலிண்டா் விலை திரும்பப் பெற வேண்டும்.