வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறவுள்ளது.
மாநிலத்தின் 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியும், தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கும்.
Advertisement
வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்களும், செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொகுதிக்கு ஒருவர் என 234 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 18,000 போலீஸார் ஈடுபடுவது மட்டுமின்றி, 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது, மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்கும்வகையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகர் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்பட 234 தேர்தல் பார்வையாளர்களுடனும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடுகின்றனர்.