இழுபறியில் புதிய ஆட்சி! திருவனந்தபுரம் செல்கிறார் ஆளுநர்?
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடிக்கும் நிலையில் திருவனந்தபுரம் செல்கிறார் ஆளுநர் என்று தகவல்கள் வெளியாகின்றன.
தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலிக்கு மிக அருகிலும், வெகு தொலைவிலும் இருக்கிறார் தவெக தலைவர் விஜய் என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறிக்கொண்டேயிருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் திருவனந்தபுரம் புறப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று இரவு முடிவுகள் வெளியாகின. மறுநாள், கேரளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.
தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதி விஜய், முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அன்று இரவே சென்னையில் இருந்து புறப்பட்டு கேரளம் திரும்பவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
Advertisement
ஆனால், தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்ததால், மே 7ஆம் தேதி தமிழக ஆளுநர் அர்லேகர், கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
அடுத்தடுத்த நாள்களில் விஜய் ஆளுநர் மாளிகை சென்று ஆதரவு கடிதங்களை அளித்து முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. இதோ மே 9ஆம் தேதி வரை விஜய் முதல்வராவதற்கான வழிமுறைகள் காணப்படவில்லை.
விசிக தன்னுடைய நிலைப்பாடு குறித்து மாலை 4 மணிக்கு தெரிவிப்பதாகக் கூறி அனைவரையும் மணி பார்க்க வைத்துவிட்டது.
ஒருபக்கம் விசிக ஆதரவு கடிதம் அளித்தாலும் அதனை கொண்டுபோய் கொடுக்க ஆளுநர் அர்லேகர், ஆளுநர் மாளிகையில் இருக்க மாட்டாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், அவர் இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாவிட்டாலும், அவர் சென்னையிலிருந்து கேரளம் திரும்ப வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
அடுத்து என்ன நடக்கும் என்று திக் திக் நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த செய்தி தவெகவினருக்கு சற்று அதிர்ச்சியை அளிக்கலாம். இது உண்மையில்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.