தவெகவுக்கு ஆதரவா? இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு: விசிக
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு வெளியாகும்என விசிக அறிவித்துள்ளது.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கக் கோரி அக்கட்சியின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க, தவெகவுக்கு இன்னமும் 2 இடங்கள் குறைவாக இருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்தால், விஜய் இன்று மாலையே தமிழக முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து இன்று காலை 11 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பார் என்று காலை முதலே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் நிர்வாகிகள், அரசியல் நகர்வுகள் குறித்து முடிவெடுக்க கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்று மாலை 4 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா என்பதை சனிக்கிழமை காலை அறிவிப்பதாக தொல். திருமாவளவன் நேற்று கூறியிருந்த நிலையில், இன்று மாலை அறிவிக்கப்படும் என மீண்டும் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று மாலை இணையவழியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் அண்மைய அரசியல் நெருக்கடி குறித்து முன்னணி தோழர்களோடு தொல். திருமாவளவன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இன்று காலை முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடிவு இன்று மாலை 4 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாமதத்தின் பின்னணியில் இருப்பது என்ன? ஆதரவு அல்லது இல்லை என்பதை தெரிவிக்க இத்தனை காலம் கடத்துவது ஏன் என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
விசிக சார்பில் தவெகவுக்கு முக்கிய நிபந்தனைகள் ஏதேனும் விதிக்கப்படுமா? அது குறித்துதான் ஆலோசிக்கப்பட்டு வருகிறதா? நேரம் கடத்த கடத்த அந்த நிபந்தனைகளை ஏற்கும் நிலை தவெகவுக்கு ஏற்பட்டுவிடும் என்பதும் தாமதத்தின் பின்னணியா? என்பது போன்ற கேள்விகளும் தவெகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
இது அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வுகளை கவனமாக உற்றுநோக்கி வரும் மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விசிக நிர்வாகிகள் இன்று கட்சியின் அலுவலகத்தில் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், செய்தியாளர்களை இன்று காலை 11 மணிக்கு கட்சி சார்பில் அழைக்கவில்லை. இன்று மாலைதான் அறிவிப்பு வெளியாகும். அதற்கு முறைப்படி செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
The VKC has announced that an announcement regarding its support for the TVK will be made at 4 pm today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.