பேரவையில் தவெகவுக்கு ஆதரவு ஏன்? அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏன்? எஸ்.பி. வேலுமணி பதில்!
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி...
தவெகவுக்கு மக்கள் ஆதரவளித்ததாலும் திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"அதிமுக எங்கள் உயிர் மூச்சு. எங்களுடைய பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிதான். நானும் சி.வி. சண்முகமும் இணைந்து நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அதேபோல மாவட்டச் செயலாளர்களும் கோரிக்கையை முன்வைத்தனர். அதன்படியே எடப்பாடி பழனிசாமியும் அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளார். கட்சியை வலுப்படுத்துவோம். தோல்வி பற்றி ஆராய்ந்து சரியான முறையில் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம்.
Advertisement
Advertisement
மக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். அதனால் நாங்கள் தவெகவுக்கு ஆதரவளித்தோம். அதன்படியே முதல்வர் விஜய் எங்களை வந்து சந்தித்தார். திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். சி.வி. சண்முகமும் சரி, தவெக தரப்பிலும் சரி இதுபற்றி விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.
சி.வி. சண்முகம் உள்பட நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கருத்து வேறுபாடுகள் இருந்தது. எல்லாம் சரியாகிவிட்டது. நாங்கள் இணைந்து ஒற்றுமையாகவே முடிவெடுத்தோம். சி.வி. சண்முகம் முடிவுதான் எங்களுடைய முடிவு. தோல்வி பற்றி ஆராய வேண்டும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கருத்து வேறுபாடுகள் வந்தது" என்றார்.
'இப்போதும் தவெகவுக்குத்தான் ஆதரவா?' என்ற கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி 'தேவையுள்ள கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டேன்' என்று கூறிவிட்டுச் சென்றார்.