மூன்றாவது இடத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து!
முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்கப்படாதது பற்றி...
தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் இன்று பதவியேற்ற விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பொதுவாக தமிழ்நாடு அரசு விழாக்களில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான மரபு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது.
இதனால், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் மரபைப் பின்பற்றாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசு விழாக்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு தெரிவித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டில் வழக்கமான மரபு பின்பற்றப்பட்டுவந்தது. எனினும் தமிழக அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடப்பட்டிருக்கிறது.
முதல்வர் விஜய்யின் முதல் நிகழ்ச்சிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, பேரவையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என தெரிவித்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.