முதல்வர் பதவியேற்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து: வைகோ கண்டனம்!
முதல்வர் பதவியேற்பு விழாவில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்தது குறித்து...
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படாததை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திங்கள்கிழமை (மே 11) கண்டித்தார்.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்று பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
Advertisement
ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது. இந்த நிகழ்வு அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியது.
இதுகுறித்து பேசிய வைகோ, “அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட வேண்டும். முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவின்போது, அதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இதற்குக் காரணம் மாநில அரசு அல்ல; மத்திய அரசையே நாம் குற்றம் சாட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய், வைகோ உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்தது குறித்து பேசிய அவர், “முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்தித்தது, அறிஞர் அண்ணா மேற்கொண்ட இதுமாதிரியான ஒரு செயலை நினைவுபடுத்துகிறது. மதச்சார்பின்மைப் பாதையைப் பின்பற்றுமாறு நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்குச் சென்று, முதல்வர் சி. ஜோசப் விஜய் அவரை சந்தித்து இன்று (மே 11) வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.