முதல்வர் விஜய்யுடன் பேசியது என்ன? வைகோ விளக்கம்!
முதல்வர் சி. ஜோசப் விஜய் உடன் பேசியது குறித்து வைகோ விளக்கம்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்குச் சென்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் இன்று (மே 11) வருகைப்புரிந்தார்.
வைகோவின் மகன் துரை வைகோ, வீட்டு வாசலுக்கு வந்து விஜய்க்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் விஜய்யை வீட்டினுள் துரை வைகோ அழைத்துச் சென்றார்.
Advertisement
வீட்டினுள் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வைகோ மாலை அணிவித்தார். பின்னர் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வீட்டிற்குள் வைகோவை சந்தித்து விஜய் நலம் விசாரித்தார். முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு, வைகோ வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய்யை கார் வரை சென்று வைகோ வழியனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது:
''விஜய்யின் தந்தை சந்திரசேகர், 1983ஆம் ஆண்டு புதிய இல்லம் கட்டி திறப்பு விழா நடத்தியபோது கலைஞர் கருணாநிதி உடன் அவரின் வீட்டிற்குச் சென்றதை நினைவூட்டினேன். அப்போது விஜய்க்கு 9 வயது.
விமான நிலையத்தில் அமர்ந்திருந்தபோது தொலைவில் என்னைப் பார்த்துவிட்டு வேகமாக ஓடி வந்து விஜய் மரியாதை செலுத்தினார். அதனை அவருக்கு நினைவூட்டினேன்.
வெள்ளித் திரை உலகில் பணிவான பண்புகளுடன் இருக்கிறார் விஜய் என்று நினைத்து சிலாகித்ததுண்டு. அந்த சம்பவங்களை அவரிடம் பகிர்ந்தேன்.
எனது பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகன் என விஜய் கூறினார். விக்கிரவாண்டிக்குச் செல்லும்போது எனது பேச்சுக்களை திரும்ப திரும்ப போட்டுக்கேட்டதாகக் கூறினார். அவர் சொன்னது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
தமிழக முதல்வராக எடுக்கும் முயற்சிகளுக்கு விஜய்க்கு வாழ்த்து கூறினேன். தேர்தல் முடிவில் அதிசயங்களும் ஆச்சரியங்களும் நடக்கும் என வாக்கு எண்ணிக்கைக்கு இரு நாள்களுக்கு முன்பு கூறியிருந்தேன். அது தற்போது நடந்துள்ளது.
மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலைதான் இந்தத் தேர்தல் முடிவு. ஆரோக்கியமான அரசியல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காக சமிக்ஞையாக விஜய்யின் வருகை அமைந்துள்ளது. விஜய்யின் உயர்ந்த பண்பாட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றியை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்'' என வைகோ குறிப்பிட்டார்.