விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை: வைகோ
தவெக தலைவர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என மதிமுக தலைவர் வைகோ பேச்சு
தவெக தலைவர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என மதிமுக தலைவர் வைகோ பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக தலைவர் வைகோ பேசியதாவது, "மதிமுகவின் முக்கியமான நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றதால், எங்கள் எம்எல்ஏ-க்களான ராஜேந்திரன் மற்றும் வழக்குரைஞர் செந்தில்செல்வனும் சட்டப்பேரவைக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் போனது.
திமுக கூறியதைப் போல, 6 மாத காலம் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது என்றும், இந்த அரசு எடுக்கிற நல்ல முயற்சிகள், நல்ல திட்டங்கள் வெற்றிபெற வேண்டும் என்றும் மதிமுக சார்பில் எங்களின் விருப்பத்தையும் வாழ்த்துகளையும் முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
1967-ல் அண்ணா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், காமராஜரையும் பக்வத்சலம் மற்றும் தலைவர்களையும் வீடுதேடிச் சென்று பார்த்ததைப்போல, இன்றைய முதல்வர் சி. ஜோசப் விஜய்யும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களின் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று ஒரு நல்ல முன்மாதிரியை, ஓர் ஆரோக்கியமான அரசியல் தழைப்பதற்கு அவர் மேற்கொண்டிருக்கிற இந்த அணுகுமுறைக்கு பாராட்டுகள்.
அவருக்கு முன்பாகவே பெரும்பான்மை 120 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து விட்டது. அதிமுகவின் ஒரு பிரிவினர் ஆதரிக்காமலேயே அவருக்கு பெரும்பான்மை கிடைத்திருப்பதை அவர் உறுதிசெய்து விட்டார். அவர்கள் ஆதரவு தெரிவிக்கும்போது, வேண்டாம் என்றா சொல்ல முடியும்?
அவர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எனக்குத் தெரியவில்லை. அவர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது என்னுடைய கருத்து.
அமமுகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ, தானாகவே சென்று முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது எப்படி குதிரை பேரமாகும்?" என்று தெரிவித்தார்.