ஒரு சிலர் செய்த தவறுக்காக 22 லட்சம் மாணவர்களுக்குத் தண்டனையா? திருமாவளவன்
நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேச்சு...
ஒரு சிலர் செய்த தவறுக்காக 22 லட்சம் மாணவர்களுக்குத் தண்டனையா? என நீட் தேர்வு ரத்து குறித்து மத்திய அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தோ்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்பட்டிருக்கும் நிலையில், வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும் ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை எழும்பூரில் திராவிடர் கழகம் சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, ஐயுஎம்எல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டன.
அப்போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்,
"ராஜஸ்தானில் கோட்டா நகரைப் போல தமிழகத்திலும் தெருவுக்குத் தெரு நீட் பயிற்சி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அவையனைத்தும் வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன.
தமிழகத்தில் முன்னதாக 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. தமிழ்நாட்டில் அந்த முறையே பின்பற்றப்பட வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் இதனை வலியுறுத்தி பின்பற்ற வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். தென்னிந்தியாவிலாவது முதலில் இதனைச் செய்ய வேண்டும்.
ஒரு சிலர் செய்த தவறுக்காக 22 லட்சம் மாணவர்களுக்குத் தண்டனையா? நீட் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பதே விசிகவின் கோரிக்கை,
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
கல்வி என்பது முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். கல்வி சார்ந்து மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு என்று கூடாது என்று தமிழக அரசு சொல்லியும் பேரவையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது" என்று பேசினார்.
VCK leader thol thirumavalavan speech in protest against NEET Exam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.