நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்! நியாயமான, பாதுகாப்பான முறையில் நடத்த என்டிஏ உறுதி!
ஜூன் 21 அன்று நீட் மறுதேர்வு நடக்கவுள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு பற்றி....
நீட் மறுதேர்வு வருகிற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வு நேரம் 3 மணி நேரம் 15 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான நீட் (NEET) தோ்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதைக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் நீட் மறுதேர்வு வருகிற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நீட் மறுதேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய தேர்வுகள் முகமை இதுபற்றி, "நீட் தேர்வை நியாயமான, பாதுகாப்பான மற்றும் தேர்வர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நடத்த தேசியத் தேர்வுகள் முகமை உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்காக தேர்வர்களுக்காக சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தேர்வுக்கான கால அளவு 195 நிமிடங்களாக (3 மணி நேரம் 15 நிமிடங்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுதல் மற்றும் பிற கண்காணிப்பு நடைமுறைகள் போன்ற தேர்வு நடைமுறைகளுக்குத் தேவைப்படும் நேரமும் இதில் அடங்கும்.
இந்த நிர்வாக நடைமுறைகளால் தேர்வெழுத்துவதற்கான நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருதிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் தேர்வு நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும், வினாத்தாள் புத்தகத்தில் 'தோராயக் கணக்கீடு' (rough work) செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளது.